தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

எளிமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என அறியப்படும் தமிழ்நாடு முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் காலமானார்.

Update: 2023-04-11 05:17 GMT

தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. கணிதம், காந்திய சிந்தனை ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றார். 1973-ல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். சிவகங்கை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மாவட்டத்தின் முதல் ஆட்சியர் பொறுப்பு வகித்தவர்.

37 ஆண்டுகால ஐ.ஏ.எஸ் பணி அனுபவத்தில் ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 1998 மார்ச் முதல் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் வரையும், பின்னர், 2005-ம் ஆண்டு ஜனவரி முதல், 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறும் வரையும் என மொத்தமாக 8 ஆண்டுகள் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றினார்.

தேர்தலில் தொழில்நுட்பத்தை புகுத்தியவர். 8 ஆண்டுகள் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக முத்திரை பதித்தவர் நரேஷ் குப்தா. வாக்கு சதவீதத்தை எஸ்.எம்.எஸ் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை தொடங்கினார். பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் உத்தியை உருவாக்கினார்.

திமுக மற்றும் அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த நரேஷ் குப்தா, 2 முதலமைச்சர்களுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்தார். தேர்தல் கட்டுப்பாட்டு காலங்களில் மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் நரேஷ் குப்தாதான். 1999, 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றினார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ சந்தித்ததில்லை.

தேர்தலில் இன்றைய நவீன நடைமுறைகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் நரேஷ் குப்தா. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை 2009-ம் ஆண்டே தேர்தலில் புகுத்தினார் நரேஷ் குப்தா. நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக தேர்தலை நடத்துவதில் நாட்டம் கொண்ட அவர், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

2010-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்ற அவர், சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு, கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான நரேஷ் குப்தா அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி' என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News