முன்னாள் எம்.பி யின் உதவியாளர் கைது: வேலைவாங்கி தருவதாக 6லட்சம் மோசடி
தஞ்சையில் மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி.யின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி.யின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை வீட்டுவசதி வாரியம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது 45). இவர் பி.பாம் படித்துவிட்டு தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு மருந்துகள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு இவருடைய மகனுக்கு தஞ்சை விமானப்படை நிலைய வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு அப்போதைய மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து சிபாரிசு கடிதம் கேட்டுள்ளார்.
அப்போது எம்.பி.யின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்த சேஷாத்ரி (50) என்பவர் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர், பாலதண்டாயுதமும் சேஷாத்ரியும் குடும்ப நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது பெரியப்பா மகன்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக பாலதண்டாயுத்திடம் சேஷாத்ரி கூறி உள்ளார்.
இந்த வேலைக்கு ரூ.12 லட்சம் ஆகும் எனக்கூறிய சேஷாத்ரி, முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், வேலை கிடைத்த பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலதண்டாயுதம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து சேஷாத்திரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.