ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

ஜெயலலிதா வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என்று 7-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Update: 2023-12-05 07:12 GMT

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு உடை அணிந்து வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் ஆளுமை, நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

இதய தெய்வம், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23) மலர் தூவி மரியாதை செலுத்தினேன். ஜெயலலிதா வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News