கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்

கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Update: 2022-05-08 08:34 GMT

தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

இதை தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இதனால் இதற்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News