எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா கொடுத்த 'அசைன்மெண்ட்' என்ன தெரியுமா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா கொடுத்த 'அசைன்மெண்ட்' என்ன தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-09-21 13:17 GMT

அமித்ஷா.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில் கட்சியை இனி வழி நடத்தப்போவது எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்கிற முடிவு நீதிமன்றத்தின் கைக்கு சென்று விட்டது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விட்டது.

இந்த சட்ட போராட்டம் ஒரு புறம் இருக்க சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது அமித்ஷா எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு முக்கியமான அசைன்மெண்ட் கொடுத்து இருக்கிறார் என பாரதீய ஜனதா கட்சி தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அசைன்மெண்ட் மிகவும் ரகசியமானது என்றும் கூறி வருகிறார்கள்.

அத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு ஆதரவாக உள்ள 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தையும் சமர்ப்பித்து உள்ளனர். மேலும் தங்களுக்கே அனைத்து உரிமைகளும் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எடப்பாடி சந்திப்பிற்கு பின்னர் எடப்பாடி தரப்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.


இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் அமித்ஷா உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் எடப்பாடியார் தரப்பு தான் தமிழகத்தில் உண்மையான அ.தி.மு.க. என்பதை பா.ஜ.க. மேலிடம் புரிந்து கொண்டுள்ளது.  நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு குறைந்த பட்சம் 10 நாடாளுமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அந்த வெற்றிக்கனியை எடப்பாடியாரால் தான் பறித்து கொடுக்க முடியும் என்பதையும் உணர்ந்து உள்ளனர். அது தான் இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் ஆக நாங்கள் கருதுகிறோம். அதற்கு தகுந்தாற்போல் எங்களது நாடாளுமன்ற தேர்தல் வியூகம் அமையும் என்றார்கள்.

வருகிற 25ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கிறார்கள்.அதிமுக  கட்சி ரீதியாக உள்ள மாவட்ட செயலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆதலால் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினர் ஆதரவு தங்களுக்கு தேவை இல்லை என்றும் அவர்களால் தங்களுடன் மோத முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறது. அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சினை ஒ. பன்னீர் செல்வம் தான். அவரை சட்ட ரீதியாக சந்திப்பது என முடிவு எடுத்து அதற்கான முயற்சிளில் இறங்கி உள்ளனர்.


அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது அ.தி.மு.க. வில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஒரு முக்கிய நகர்வாக கருதப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கும்படி கறார் ஆக வலியுறுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை திட்டவட்டமாக மறுத்தார். அவர்களது ஆதரவு இல்லாமலேயே வெற்றிக் கனியை பறித்து தர முடியும் என உறுதி அளித்து இருந்தார். ஆனால் அன்று அளித்த உறுதியின்படி அ.தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை இது பா.ஜ.க. தரப்பிற்கு அவர் மேல் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அதன் காரணமாகத்தான் இவ்வளவு நாட்களும் அவருக்கு வெளிப்படையான ஆதரவு கிடைக்கவில்லை. பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வந்தது .இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த தேர்தலில் தமிழகத்தில் பலமாக உள்ளதாக கருதப்படும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் கூட்டணி ஏற்படுத்தினால் தான் தங்களால் குறைந்த அளவிலாவது இடங்களை பெற முடியும் என டெல்லி தரப்பு கருதுகிறது. அதன் காரணமாகவே சில முக்கிய முடிவுகளையும் எடுக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவிக்கு திதி கொடுப்பதற்காக வாரணாசி சென்று உள்ளார்.அவர் வருவதற்குள் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறிப்பாக பன்னீர்செல்வம் தரப்பை பலம் இழக்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் எடப்பாடி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொடர்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கின் விசாரணை எப்பொழுது தொடங்கும், எவ்வளவு காலம் நடக்கும், தீர்ப்பு எப்போது வரும்? என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலையிலும் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சட்டபூர்வமானது தான் என்பதை நிரூபிப்பதற்காக சட்ட வல்லுனர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் எப்படியும் தங்களுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பு வரும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

Tags:    

Similar News