பாஜகவில் இணையும் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்

திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாக திருச்சி சிவாவின் மகன் சூர்யா குற்றச்சாட்டு

Update: 2022-05-08 07:27 GMT

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருச்சி சிவாவின் மகன் சூர்யா விருப்ப மனு அளித்தார். நேர்காணலில் பங்கேற்ற சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால் திருச்சி சிவாவின் மகன் அதிருப்தியில் இருந்து வந்தார்.

தனது குடும்பத்தினர் பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தனது தந்தைக்கும், தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில் திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் சபரீசன் அணி , உதயநிதி அணி , கனிமொழி அணி என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்படுவதாகவும் சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். கனிமொழி அணியில் இருந்ததால் திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் ,சபரீசன் அணிக்கும் உதயநிதி அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News