சுகாதார துறையில் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-08 08:47 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர், பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த மனுவில், கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், பணி நிரந்தரம் வழங்கும் போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ஆனால், பணி நிரந்தரம் கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவதாகவும், காலியாக உள்ள 800 ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், ஓட்டுநர்கள் பணி காலியிடங்களை நிரப்ப தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், சுகாதாரத் துறையில் 800 ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலஸ் ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News