கொரோனா புதிய அலை.. முகக்கவசம் கட்டாயமாக்க ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா புதிய அலை காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-12-21 09:11 GMT

ராமதாஸ் (கோப்பு படம்)

கொரோனா புதிய அலை காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 மேலாண்மை மீதான கட்டுப்பாட்டை சீன அரசாங்கம் இழந்து வருகிறது.  குளிர்காலத்தில் நாட்டை தாக்கும் வைரஸ் குறைந்தது மூன்று அலைகளையாவது ஏற்படுத்தும் என சீன தொற்றுநோய் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சீனா முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை திடீரென முடிவுக்குக் கொண்டுவர சீன அரசாங்கம் தயாராக இல்லை என்பது உறுதி என்று சீன ஊடகமான 'தி ஹாங்காங் போஸ்ட்' தெரிவித்துள்ளது.

ஜப்பான், கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நடைமுறைபடுத்தவுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த அலை பரவல் தொடங்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News