தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பா? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-17 12:00 GMT
பைல் படம்.

வரும் 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தினவிழாவும், ராணுவ அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கும். எனினும், கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு குடியரசு தினவிழா பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில்,  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற தென் மாநிலங்களின் ஊர்திகள்  பங்கேற்க அனுமதி இல்லை என, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தெரிவித்துவிட்டது.

இதனிடையே, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது, தமிழகத்தில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், குடியரசு தின அலங்கார அணிவகுப்பு ஊர்வலத்தில், விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதுபற்றி முறையிட்டனர். இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதாக, அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக, டி.ஆர். பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Tags:    

Similar News