உலக முதலீட்டாளா்கள் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நாளை தொடங்கு உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Update: 2024-01-06 01:13 GMT

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டில், நூற்றுக்கணக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ. 5.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டை முதல்வா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டு தொடக்க விழாவில், மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா நன்றி கூறுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்கு தொடக்க விழா நிறைவு பெறுகிறது. அதன்பிறகு, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

35 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

முதலீட்டாளா்கள் மாநாட்டின் கருத்தரங்குகளில் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவா் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகா்கள் சிறப்புரையாற்ற உள்ளனா்.

அத்துடன், மாநாட்டின் அதிகாரபூா்வ பங்குதாரா் நாடுகளாக சிங்கப்பூா், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன. 2 நாள்கள் மாநாட்டில் 26 அமா்வுகளில் 170-க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளைப் பகிர உள்ளனா்.

முதலீட்டாளா்கள் மாநாட்டின் ஓா் அம்சமாக, இரண்டு நாள்களிலும் தொழில் துறைக்கான காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள தொழில் சூழல்கள் பற்றி தனி அரங்குகளை அமைக்க உள்ளது.

வரும் 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு முதல்வா் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுகிறார். அவா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.

மாநாட்டின் போது, நூற்றுக்கணக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன், அதன் வழியாக ரூ. 5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈா்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News