அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரைக்கு திட்டங்களை அறிவித்த முதல்வர்

அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும்; மீனாட்சியம்மன் கோவிலுக்கு 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2022-01-21 07:00 GMT

முதல்வர் ஸ்டாலின்  

மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, சென்னையில் இருந்தவாறே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சங்ககால நகரமான மதுரை, இன்று நவீன மதுரையாக மாறியுள்ளது. இதைச் செய்தது திமுக அரசுதான். மதுரையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் விரைவில், ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

அதேபோல், அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கபடும். மதுரை மத்திய சிறை, புதியதாக மாநகராட்சிக்கு வெளியே அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Tags:    

Similar News