டெல்டா மாவட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

டெல்டா மாவட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2023-09-07 03:02 GMT

முதல்வர் ஸ்டாலின்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைமடை வரை தேவையான தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத்துறை ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பதிலாக, சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீரின்றி கருகியதால் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்டத்தில் குறுவை பயிர் சேதம் குறித்தும், குறுவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News