ரூ.1000 பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-10 06:06 GMT

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை  ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொங்கல் பரிசு ரூ.1000 பற்றி எதுவும் கூறப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கு ஆயிரம் ரூபாய்   பரிசு தொகையும் வழங்கப்படும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஆயிரம் பரிசு தொகையானது அரிசி அட்டைதாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாதவர்கள் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நியாயவிலைக்கடைகளில் தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி  தொடங்கியது. பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என நினைத்து ரேஷன் கடைக்கு டோக்கன் வாங்குவற்காக சென்ற வருமான வரி செலுத்தாத குடும்ப அட்டைதாரர்கள்  பலரும் நிபந்தனைகள் காரணமாக ஏமாற்றம் அடைந்தனர். இது தமிழக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திடீரென சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை ஆயிரம்  ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள நியாய விலை கடையில் இந்த திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக அவர் ஐந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 பொங்கல் பரிசு தொகையை ஒரு கவரில் போட்டும் மேலும் மஞ்சள் பையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை  வழங்கி தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்தார்.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கரபாணி பெரிய கருப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் வருகிற 14-ஆம் தேதி வரை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 மற்றும் அரிசி, சர்க்கரை முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதி நியாய விலை கடைகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் 2 கோடியை 19 லட்சத்து 57 ஆயிரத்து  404 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இழுத்தடிப்பிற்கு பின்னர் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை ரூ. ஆயிரம் வழங்கப்படுவது அனைத்து தரப்பு மக்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News