டெல்டா பாசனம்: ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-06-06 09:45 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் (பைல் படம்).

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்றின் தலைப்பில் காவிரி ஆற்றில் நீரொழுங்கி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை, வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜூன் 8-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், ஜூன் 9-ம் தேதி திருச்சி மற்றும் திருவாரூர் சென்று ஆய்வு நடத்துகிறார். மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதியே திறக்க தமிழக வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அவர் இந்த ஆய்வை மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News