பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக காஜா முகைதீன் நியமனம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக காஜா முகைதீனை நியமித்து முதலமைச்சர் உத்தரவு.

Update: 2022-01-22 17:14 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீனை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அறிவுச்சுடர் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்துத் தந்த சமூகநீதிப் பாதையில் நடைபோடும் இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் முன்னேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இச்சமூக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இவர்களது ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

இத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில், பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும்.

இக்கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திடும் நோக்கில், அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் அவர்களை நியமனம் செய்யப்படுகிறது, என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News