தமிழக டிஜிபி-க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பரபரப்பு கடிதம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பி உள்ளார்.;

Update: 2023-06-07 13:11 GMT

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா. (கோப்பு படம்).

தமிழக நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர்கள் நேரில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்வது வழக்கம். பெரும்பாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான முழு விவரங்களை தெரிந்தவர்களாக இருப்பது உண்டு.

சிலர் வழக்குகள் தொடர்பான விவரங்களை தெரியாமல் நீதிமன்றத்தில் பெயரளவுக்கு ஆஜரானால் நீதிபதிகள் கடிந்து கொள்வதும் உண்டு. இந்த நிலையில், வழக்குகள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த காவல்துறையினரை மட்டுமே உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக டிஜிபிக்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்காக, ஆஜராகியிருந்த காவலர், முறையான தகவல்களை வழங்க முடியாமல் தடுமாறியதைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஏற்கெனவே இதுகுறித்து பிறப்பித்த உத்தரவுகளுக்கு செவி சாய்க்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

வழக்கு பற்றிய தகவல்கள் தெரிந்த காவலர்களை மட்டுமே அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபி-யை அறிவுறுத்தும்படி, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை மேற்கோள் காட்டி, வழக்கு தொடர்பான முழு விவரங்கள் தெரிந்த அதிகாரிகளை அனுப்பி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கூறி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு தற்போது கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News