விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-11-07 01:45 GMT

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், சென்னை நகரில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல்,, கோயம்பேடு, ஆவடி, எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், செங்குன்றம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித்ட் தீர்த்தது. குறிப்பாக சென்னை மீனம்பாக்கத்தில் நள்ளிரவில் 2 மணி நேரத்தில் மட்டும் 6 செ.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தொடர்ந்து மழை நீடிப்பதால, சென்னையின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி இருக்கிறது. இதேபோல், ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.  

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News