நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான 868 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-27 12:42 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் மீதான  பதிலுரையில், "கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய  அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்'' என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினையடுத்து 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில்  "நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனவும் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும் என மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  ஆணையிட்டுள்ளார்.

Tags:    

Similar News