பேருந்துகளில் படிக்கட்டு பயணத்திற்கு வேட்டு: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

பேருந்துகளில் படிக்கட்டு பயணத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-04-25 09:24 GMT

மதுரை ஐகோர்ட் கிளை (கோப்பு படம்)

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது.? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது

மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி, அவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து, பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் சில நாட்களுக்கு முன் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி மாணவன் , ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி, செருப்புக் காலால் ஸ்கேட்டிங் செய்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பிளஸ் 1 மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் பேருந்துகளில் தானியங்கி கதவுகளை பொறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்தான், இளைஞர்களின் நலன் கருதி தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு எடுத்தது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும், இளைஞர்களின் படிகட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை.

பல இடங்களில் , ஓட்டுநர்களும், நடத்துனர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இளைஞர்கள் ஜாலியாக படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் பலியாகின்றனர். எனவே இளைஞர்களின், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி தமிழகத்தில் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிகட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்.

எனவே, படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிகட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது.? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

Tags:    

Similar News