அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்த்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-10-10 01:45 GMT

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடை மற்றும் ஆலைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகின்றன. அதேபோல் பெரும் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

கடந்த 7ம் தேதி தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டன. 

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 15 க்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருமானூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் சிக்கி 10 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் எரிந்து சேதமடைந்தன.

Tags:    

Similar News