ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்

Update: 2022-05-12 10:31 GMT

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் நெருங்கிய நண்பர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன். சண்முகநாதனிடம் சுதாகரன் அமைச்சரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறவே, சண்முகநாதன் அரசு வேலை தேடி கொண்டிருந்த நபர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று சுதாகரனிடம் தலைமை செயலகத்தில் வழங்கினாராம்.

பல வருடங்களாக குறிப்பிட்ட வேலை வாங்கித் தராமல் இருந்ததினால் சந்தேகமடைந்து சுதாகரனிடம் கேட்டபோது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டதாகவும், உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று கூறி காலம் தாழ்த்தி வந்ததுள்ளாராம்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி பணத்தை திரும்ப கேட்க தலைமை செயலகம் சென்ற போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை கட்டாயமாக கிடைத்துவிடும் என சமரசம் செய்து அனுப்பியதாக தெரிகிறது.

இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன், சண்முகநாதன் பணத்தை உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டபோது, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும், அவரிடம் தான் பணம் இருப்பதாகவும், இனி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன் எனவும் அவர்கள் மிரட்டினராம்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சண்முகநாதன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உதவியாளர் சுதாகரன், அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோரிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த சுதாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News