அண்ணா பல்கலைக்கழக டீன் பேராசிரியர் டாக்டர் சக்தி நாதன் மறைவு

நீர்நிலைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை

Update: 2021-05-10 14:15 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக டீன் பேராசிரியர் டாக்டர் சக்தி நாதன் (கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு) சற்று முன் காலமானார்.

திருநெல்வேலியை சேர்ந்த இவர் ஒருங்கிணைந்த நெல்லை திருநெல்வேலி மாவட்டங்களில் தனது வழக்கமான பணிகளுடன் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து நீர்நிலைகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல நீர்நிலைகள் இன்று உயிர் பெற்றது இவரால்தான்.. ஆனால். அவர் ?

நல்லவர்களின் கதி இதுதானா..?

நதிகளின் ஓட்டத்தை தடுத்த சக்திகளின் தடையை தகர்த்தவர் சக்தி நாதன்.. நம் தாமிரபரணி என்ற அமைப்பை உருவாக்கி ஒப்பற்ற செயல் ஒன்றை ஓசையின்றி செய்து தாமிரபரணி அன்னையை மீண்டும் தவழ வைத்தவர் .

தாமிரபரணி, சிற்றாறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், மானூர்,பள்ளமடை உள்ளிட்ட பாசன குளங்கள், கால்வாய்கள் மானாவாரி குளங்கள் என எண்ணற்ற நீர்நிலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அப் பகுதி மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மக்களுக்காக பாடுபட்டு இயற்கையை மீட்டெடுத்த மரியாதைக்குரிய டாக்டர் சக்தி நாதன் இன்று நம்மிடையே இல்லை.

அந்த இயற்கையே அவரை எடுத்துக்கொண்டு கொண்டது என்று சொல்லவா?அல்லது

இறைவன் கொடியவனே என்று சொல்லவா? என்ன சொல்லி புலம்பினாலும் இனி எள்ளளவும் பயனில்லை..

அந்த சான்றோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்திப்பதை தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? வெறும் கண்ணீர் அஞ்சலி , ஆழ்ந்த இரங்கல் என்று வார்த்தைகளால் துயரத்தைப் போக்க முடியாது.

அன்னார் விட்டுச் சென்ற பணிகளை முழுமையாக செய்வதே... அந்த நல்ல உள்ளத்திற்கு நாம் செலுத்தும் நிஜமான நன்றிக்கடன் ஆகும்

Tags:    

Similar News