ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-13 08:17 GMT

லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜ். இவரது குடும்பத்திற்கும் அருகில் உள்ள ஜெகதீசன் என்பவரின் குடும்பத்திற்கும் நடந்த பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக யுவராஜ் அளித்த புகாரியின் பேரில் ஜெகதீசன்  மீது 2. 11 .2022 அன்று போச்கோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதற்காக தனக்கு  ரூ. 5000 பணத்தை லஞ்சமாக  தரவேண்டும் என கேட்டுள்ளார்.

மேலும் இந்த லஞ்ச பணத்தை 13 -12-2022 அன்று காலை தன்னிடம் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கே வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி பகுதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் யுவராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை  கொடுத்தனர். அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி  இன்று காலை 10 மணி அளவில் ரூ. 5000  பணத்தை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து அங்கு இருந்த ஆய்வாளர் மாலதியிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் மாலதியை  கையும் களவுமாக பிடித்தனர்.லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார்  லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

பின்னர் ஆய்வாளர் மாலதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வாளர் மாலதியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.லால்குடி  அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News