நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு: அரசியலில் திடீர் திருப்பம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-03 08:48 GMT

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.

பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் சந்தித்து பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் அதனை சரிசெய்யும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வந்துள்ள நிர்மலா சீதாராமனை அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கண் அசைவுகள் இல்லாமல் எதுவும் நடைபெறாது. அந்தவகையில் வேலுமணி இல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விழாவில் கலந்துகொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது. தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான மனுவை அமைச்சரிடம் அளித்தோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News