அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு

வருகிற மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-17 15:15 GMT

எடப்பாடி பழனிச்சாமி.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு கழகப் பொதுச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கட்சியினர் மேற்கண்ட கால அட்டவணையின்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கட்சி சட்ட விதி-20அ;பிரிவு-1,(a),(b),(c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்ச்சி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

கட்சியின் பொதுச் செயலாளர், பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கிறது. மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதியாகும். வேட்பு மனு திரும்ப பெறுதல் மார்ச் 21 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று நடைபெற்று, மார்ச் 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இந்த தேர்தல் குறித்து கூறுகையில், ”இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது. தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றுதான் இதுவரை உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. ஆனால், அவசர கோலத்தில் அரசியல் மோசடியை செய்ய முயற்சிக்கிறார்கள். இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டை கொடுப்பது மோசடி. பதவி போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News