அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு: பேனரில் ஓ.பி.எஸ் படம் கிழிப்பால் அதிர்ச்சி..!

சென்னையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் 50 வது ஆண்டு பொன்விழா பேனரில் ஓ.பி.எஸ் படம் கிழிக்கப்பட்டது தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2022-06-27 08:15 GMT
அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பி.எஸ் படம் பொறித்த பேனர்.

அ.தி.மு.க. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இருபிரிவாக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இவர்களில் யார் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது என போட்டி வலுத்துள்ளது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்தும் பேசி கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர்.

அப்போது தொண்டர்களில் ஒரு பிரிவினர் கண்டன கோஷம் போட்டதால், அதிர்ந்து போன ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து, இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நின்றபடி, தொண்டர்களை பார்த்து கை அசைப்பது போல பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனரில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் படங்களும் இடம்பெற்று இருந்தன. அதில், ஓ.பி.எஸ் படம் கிழிக்கப்பட்டு இருந்தது தொண்டர்கள் இடையே பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News