அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடிக்கு ‘செக்’வைத்தது ஐகோர்ட்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் ‘செக்’வைத்து உள்ளது.

Update: 2023-03-19 09:26 GMT

சென்னை ஐகோர்ட் (கோப்பு படம்).

அ.தி மு க  பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில்  சென்னை ஐகோர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைத்து உத்தரவிட்டு உள்ளது.

அ.தி.மு.க.வின் பொது செயலாளர் ஆகவும். தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் அவ்வப்போது அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் இணை பொது செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அ.தி.மு.க .மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி தன்னை இடைக்கால பொது செயலாளராக அவர் அறிவித்துக் கொண்டார். இதனை எதிர்த்து ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் இரு தரப்பினரும் மாறி மாறி வழக்கு என அ.தி.மு.க.வில் பல பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்த பரபரப்புக்கு இடையில் அ.தி.மு.க.வின் பொது செயலாளர் தேர்தல் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவினை 20 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்து மற்றும் முன்மொழிந்தனர்.

இன்று வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று மாலையே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருந்தது. இந்த சூழலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம். எல். ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில்  ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு தொடர்பான  வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  இதனை தொடர்ந்து  சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி  ராஜா இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை  நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கினை நீதிபதி குமரேஷ் அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தினார். அந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்களும்,எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதம் செய்தார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் இந்த வழக்கில் மார்ச் 24ஆம் தேதி வரை பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவினை   அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐகோர்ட் இப்பொழுது இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு விடலாம் என்று என்ற எதிர்பார்ப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் வைத்து உள்ள இந்த ‘செக்’ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொதுக்குழு தேர்தலை நடத்தினாலும் முடிவை அறிவிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழலிற்கு  அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News