டி.டி.வி. தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது.

Update: 2023-09-13 15:50 GMT

டி.டி.வி. தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். இவர், கடந்த 1995-96 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி. தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், கலைமதி ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் விதி்க்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும் அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. இது உரிமையியல் பிரச்னை கிடையாது, என்றார்.

டிடிவி.தினகரன் சா்ரபில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கபட்டு உள்ளதாகவும், இது சட்ட ரீதியாக தவறு என்றும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் சுப்பிரமணியன், கலைமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News