அப்துல்கலாமுக்கு சென்னையில் பிரம்மாண்ட சிலை.. திமுக அரசின் அடுத்த அதிரடி…

தமிழ்நாடு அரசின் செய்தித் துறை சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகில் அப்துல் கலாம் திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது.

Update: 2023-02-14 14:31 GMT

சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் புதிய புரோட்டான் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

சென்னை தரமணி அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் (Apollo Proton Cancer Centre) புதிய புரோட்டான் சிகிச்சை பிரிவில் (New Proton Therapy Room), "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிகிச்சை பகுதியையும்" (Dr APJ Abdul Kalam Therapy Bay), தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய புரோட்டான் சிகிச்சை திட்டத்தையும் (The Largest Proton Beam Therapy Program in South Asia & Middle East) செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

"அப்பல்லோ மருத்துவனையின் சார்பில் ஒரு முயற்சி எடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி அதிலே வெற்றியும் அடைந்து, புதிதாக புற்று நோயை குணப்படுத்துகின்ற வகையில் இன்றைக்கு கேன்சருக்கான நவீன இயந்திரங்களுடன் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் இன்றைக்கு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை மக்களை செயல்படுத்தி நோய்நொடியில் இருந்து காப்பாற்றி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று என்கிற ஒரு சூழ்நிலை இருந்தது.

அதில் இருந்து மீண்டு வரவேண்டிய ஒரு சூழ்நிலையில், முதல்வரின் உறுதியான, கடுமையான நடவடிக்கை காரணமாக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இன்றைக்கு மருத்துவத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டமனது, வீட்டிற்கே மருத்துவம் கொண்டுபோய் சேர்த்த ஒரு சிறப்பான, புரட்சிகரமான திட்டமாகும்.

இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் திட்டம் மூலம் சாலையோரத்தில் அடிப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற உதவிகள் கிடைத்தாலும், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு பாதுகாப்பாக, உதவியாக இருக்கக்கூடியவர்கள் போய் அந்த மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்கக் கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும், அது மட்டுமல்லாமல் 48 மணி நேரத்திற்குள் விபத்தில் அடிபட்டவர்களுக்கான சிகிச்சை செலவையும் அரசு ஏற்றுக் கொள்கிற சிறப்பான திட்டமாகும்.

புற்றுநோயில் இருந்து மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையிலும், குழந்தைக்குக்கூட அதேபோல பிறந்த புற்றுநோயை கண்டறியக்கூடிய தேவை இன்றைக்கு இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புற்றுநோய்க்கு தேவையான சிகிச்சை வழங்கக்கூடிய முயற்சி எடுத்து இருப்பதும், அதேபோல நம்முடைய சாதனையாளராக திகழ்ந்த அப்துல் கலாம் அவருடைய நினைவாக இந்தத் திட்டத்தை இங்கே தொடங்கி இருப்பதும் உள்ளபடியே பாராட்டுக்குரியதாகும்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித் துறை சார்பில் விரைவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில், மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்களுடைய திருவுருவச் சிலை அமைக்கப்பட இருக்கிறது.

அப்துல் கலாம் அவர்களின் சாதனைகள் போல இந்தத் திட்டம் மக்களுக்கு பயன்பட்டு, புற்றுநோய் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாக்கக் கூடிய வகையில் தென்னிந்தியாவிலேயே ஒரு சிறப்பு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஷேக் சலீம், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குரூப் ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் இயக்குநர்-ஆபரேஷன்ஸ் ஹர்ஷத் ரெட்டி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஹரிஷ் திரிவேதி, மருத்துவ இயக்குநர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் ராகேஷ் ஜலாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News