கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-21 11:51 GMT

அமைச்சர் சிவசங்கர் 

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என  போக்குவரத்துதுறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News