தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருட்கள்: அமைச்சர் தகவல்

தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-07 16:18 GMT

சென்னை இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி. 

சென்னை இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1 கிலோ வெங்காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்படுவதை உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார்.

அமுதம் மக்கள் அங்காடி மூலம் சென்னையில் 10 அங்காடிகளில் வெங்காயம் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை அங்காடிகளுக்கு 2,28,191 மெ.டன் அரிசி, 19,170 மெ.டன் சர்க்கரை, 5,321 மெ.டன் கோதுமை, 10,972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12 இலட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருள்கள் இரண்டு நாள்களில் அனுப்பி முடித்து வைக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல தரத்துடன் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News