புத்துணர்வு முகாமுக்கு கிளம்பும் யானைகள்

Update: 2021-02-07 05:05 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை முதல் நடைபெறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் புத்துணர்வு முகாம் நாளை முதல் 48 நாட்கள் நடைபெற உள்ளது. யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதுடன் மட்டுமல்லாது யானை பாகன்களுக்கும் யானையை பராமரிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் முகாமில் வழங்கப்படும்.

இதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜை செய்து லாரி மூலம் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவில் யானை கோமதி, யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முன்னதாக யானை கோமதி கோவிலுக்கு வந்தவர்களுக்கு ஆசி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா இன்று அதிகாலை லாரி மூலம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோவில் சார்பில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Tags:    

Similar News