திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் -முதல்வர் பழனிச்சாமி

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும். - முதல்வர் பழனிச்சாமி;

Update: 2021-01-01 14:45 GMT

வெற்றி நடைப்போடும் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 29ந் தேதி முதல் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிறு) ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் இன்று மாலை வந்தடைந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையம் அருகே, பெருங்குடிப் பகுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா வரவேற்றார்.

அப்போது மேடையில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது,

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில எல்லோர்க்கும் நோயற்ற வாழ்வாக, செல்வம் மிக்க வாழ்வாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2021 தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை வழங்க அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். அதிமுக அரசு மக்கள் எண்ணும் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக விளங்குகிறது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

திமுக தலைவர் வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார். மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். கருணாநிதி ஆட்சியில் அவர்கள் குடும்பம்தான் பிழைத்தது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும். திமுகவில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. முக.ஸ்டாலின் மகன் தற்பொழுது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்து மு.க.ஸ்டாலின் பேரனும் அரசியலுக்கு வர தயராக உள்ளார். திமுக ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருந்ததில்லை.

இது உங்கள் அரசு. மக்கள் அரசு. அம்மா வழியில் நடக்கும் அரசு. தொடர்ந்து நல்ல பல திட்டங்கள் உங்களுக்கு கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுகிறோம். திமுகவில் சாதாரண தொண்டர்கள் அதிகாரத்திற்கு வர முடியாது. இரு பெரும் தலைவர்கள் நல்ல பல திட்டங்கள் தொடர எங்களுக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

Similar News