தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும், வெங்கடேசன் எம் பி கடிதம்

Update: 2020-12-30 10:00 GMT

தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என ரயில்வேதுறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து வெங்கடேசன் எம்பி., எழுதியுள்ள கடிதத்தில், மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். குறைவான பயணிகள் வருகை இருந்ததால் ரத்து செய்கிறோம் என காரணம் கூறியுள்ளது தெற்கு ரயில்வே . இது ஏற்கக்கூடியதல்ல. சேவைத்துறையான ரயில்வே இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்கி லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஏற்க கூடியது அல்ல.

பயணிகளின் வருகை குறைவுக்கு காரணம் இரண்டு. ஒன்று கொள்ளைநோய் காரணமாக மக்கள் பயணிக்க அஞ்சும் காலம் . மிகவும் தேவையான பயணங்களை மட்டும் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்து வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த வருகை அவசியமான மக்களை கொண்டதாக மட்டுமே உள்ளது .அப்படி இருக்க தேஜஸ் இரயில்களை ரத்து செய்வது அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு விரோதமானது .தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஐ போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது.

கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போல கோவை பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் களையும் மீண்டும் இயக்க வேண்டும். இதே காரணத்துக்காக பயணிகள் ரயிலை தனியாருக்கு விடுவதை கை விடவும் கோருகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News