எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் ? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Update: 2020-12-29 10:00 GMT

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பது குறித்து கல்வியாளர்கள் கலந்துபேசி முதல்வர் விரைவில் முடிவுகளை அறிவிப்பார் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவில்பட்டியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 390 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.அதன்பின்னர் பேசியவர், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணை முதலமைச்சர் ஒப்புதல் பெற்று 10 நாட்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அணையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் வகையில் காலநீட்டிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மயிலாடுதுறை தனியார் புத்தக கடையில் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு விற்பனை செய்வதற்காக கூட அவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் வாங்கி வைத்திருக்கலாம் யார் வேண்டுமானாலும் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பணம் கட்டி பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது எனினும் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News