ஆளுநர் அழைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : பிஆர் பாண்டியன் பேட்டி

Update: 2020-12-18 10:55 GMT

ஆளுநர் தங்களை அழைத்து கோரிக்கை மனுவை பெற்று பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கும் வரை காவல் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேளாண் சட்டம் குறித்தான பாதிப்புகளும் தீர்வுகளும் என்ற பிரசுரத்தை வெளியிட்டார். லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் யுவராஜா பெற்றுக்கொண்டார். பின்னர் அனைவரும் வேளச்சேரி ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பி.ஆர்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றி விட்டு அதானிக்கு அம்பானிக்கும் வருத்தம் வந்து விடக் கூடாது என்பதற்காக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அழைத்துப் பேச பிரதமர் மறுப்பது அர்த்தமற்றது. உச்சநீதிமன்றமே போராட்டம் சட்டப்பூர்வமானது அதனை அனுமதிக்கிறோம் என்று அறிவித்து வேளாண் சட்டங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.இது மக்களாட்சி தத்துவத்திற்கு முரணானது.எனவே உச்சநீதிமன்ற ஆலோசனைகளை பிரதமர் ஏற்று விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சட்டத்தை புதிய சட்டமாக கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்.

ஆளுநர் விவசாயிகள் போராட்டத்தை அவமதித்திருக்கிறார். தமிழக விவசாயிகளின் உணர்வுகளை குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் எழுத்துப்பூர்வமான எங்கள் கோரிக்கையை பெற்று அனுப்பி வைக்க மறுப்பது தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது. எனவே ஆளுநர் அழைத்து கோரிக்கை மனுவை பெற்று அனுப்பி வைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாச்சிக்குளம் தாஜுதீன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுதாதர்மலிங்கம், மாநில பொது செயலாளர் பாலாறு வெங்கடேசன் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் புண்ணியமூர்த்தி சென்னை மண்டல தலைவர் துரைசாமி, கடலூர் மண்டல தலைவர் வீராணம் விநாயகமூர்த்தி நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லத்துரை திருச்சி மண்டல தலைவர் ஸ்ரீரங்கம் ஹேமநாதன் சென்னை மாவட்ட செயலாளர் சைதை சிவா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ராஜசேகர் மதுரை மண்டல தலைவர் ஆதிமூலம் மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண் சிவகங்கை மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News