வெற்றி முனைப்பில் இந்திய அணி

ஆமதாபாத்தில் நாளை நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Update: 2021-03-17 10:30 GMT

நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. இது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி, இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட 20-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சம நிலை ஆனது. மூன்றாவது போட்டி நேற்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியத்தில்  நடந்தது.

'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். ரோகித் சர்மா 15 ரன்னிலும்,  இஷான் கிஷான் 4 ரன்னிலும் வெளியேறினர். ரிஷப் பன்ட் நிதானமாக ஆடி 25 ரன் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் விராத் கோலி சிறப்பாக ஆடினார். அரை சதம் அடித்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. இலகுவான இலக்கை இங்கிலாந்து அணி 18.2 ஓவரிலேயே  2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது.

நாளைய ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News