வறுமையிலும் வென்ற டி.நடராஜன்,கிரிக்கெட்டில் சொல்லி அடித்த சேலத்து வீரர்..!

வறுமையான சூழலை வெறுமையாக நினைக்காமல் போராடி வென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன் இளைஞர்களுக்கு முன்னோடி ஆவார்.

Update: 2022-01-23 07:41 GMT

நடராஜன்.

ஐபிஎல் போட்டிகளில் தலைகாட்டி, 2020ம் ஆண்டு  டிசம்பர் மாதம் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு  முதல் முதல் நடராஜன் தேர்வானார்.

நடராஜன், புராண கதைகளில் கூறப்படும் பீனிக்ஸ் பறவையைப் போல ஒவ்வொரு முறையும் வீழ்ந்து எழுந்து வந்தவர். 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியதால், ஒருநாள் போட்டியில் அவருக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்.

வறுமையில் வாழ்ந்தபோது அவரது வீடு.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 போட்டிகளில்  நட்சத்திர வீரர்களில் ஒருவராக டி. நடராஜன் உருவெடுத்தார். போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பல போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். அவரது சிறப்பான ஆட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் சர்வதேசப் போட்டிக்கு நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இறுதியில் மூன்று வகை விளையாட்டுகளிலும் நடராஜன்  அறிமுகமானார்.

தாயுடன் நடராஜன் 

சொல்லியடிச்ச மச்சான் :

2020ல் ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் எடுத்த பல விக்கெட்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை இன்னிங்ஸின் இறுதி ஓவரில் வெளியேற்றினார். முன்னதாக அஸ்வினிடம் பேசிக்கொண்டிருந்த நடராஜன், தோனியின் விக்கெட்டை எடுக்க விரும்புவதாக ஒரு முறை அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது கூறியிருந்தார். அதேபோல தோனியை அவுட்டாக்கி சொல்லியடிச்ச வீரரானார், நடராஜன். தோனியை அவுட்டாக்கிய இந்த விக்கெட், நடராஜனுக்கு ஸ்பெஷல்.

மனைவியுடன் நடராஜன்.


குடும்பம் :

அவரது தந்தை தங்கராசு ஒரு விசைத்தறி தொழிலாளி. அம்மா சாந்தா, அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஒரு சிறிய துரித உணவு கடையை நடத்தி வந்தார். பின்னர் அவரது தந்தையும், அவரது தாயுடன் சேர்ந்து உணவுக் கடையை நடத்தி வந்தனர். நடராஜனின் மனைவி பவித்ரா. தற்போது அவர்களுக்கு ஹன்விகா என்ற குழந்தை உள்ளது. நடராஜன் அவரது குழந்தையை 'லட்டு' என்று கொண்டாடுகிறார். குழந்தை பிறந்த நேரம் தான் அவரது வேக வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததோ..?!

ஐபிஎல் போட்டியில் தோனியுடன் 

ஐபிஎல் போட்டிகளில் நடராஜனின் சம்பளம் ரூ.40லட்சங்கள். வறுமையின் சூழலில் இருந்து இன்று ஒரு செல்வந்தரான அவரது கதை இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஒரு ஊக்கமளிக்கும் சிறப்புக்கதை ஆகும். போராடினால் ஜெயிக்கலாம் என்பதை நடராஜனிடம் இருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். 

Tags:    

Similar News