தமிழகத்தில் புதிய தளர்வாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிர்வாக பணிகளை தொடங்க அரசு அனுமதி

Update: 2021-06-13 07:17 GMT

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வாக பள்ளி மற்றும் கல்லூரிகளை ஜூன் 14 முதல் திறந்து நிர்வாக பணிகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான வாகன போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வருகிற 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை அடுத்து புதிய தளர்வாக நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நிர்வாக பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதிய கல்வி ஆண்டிற்கான பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினமும் அரசு பள்ளி/கல்லூரிகளுக்கு வந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் தினமும் வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் பள்ளி/கல்லூரிகளுக்கு வருவதற்கு உதவும் வகையில் வாகன போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Similar News