மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Update: 2022-04-07 05:53 GMT

சென்னை உயர்நீதி மன்றம் (பைல் படம்)

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது . ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் முதலில் முடிவெடுக்கலாம் என்றும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கையை பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளில் தமிழ்நாடு சுகாதாரத் துறை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு 10 சதவீதத்திற்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.

அதனடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு, ஆளுனர் ஒப்புதல் பெற்று, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. மேலும், இட ஒதுக்கீட்டிலும் கூட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.மேலும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்

Similar News