மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு

கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்து உள்ளது.

Update: 2024-08-28 12:45 GMT
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் மாநில தலைவர் தியாகராஜன்.

எஸ்எஸ்ஏ திட்டத்திற்கன முதல் தவணை தொகை  ரூ 573 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் தியாகராஜன் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ₹573 கோடியை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ₹2152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணை ₹573 கோடியை ஜூன் மாதமே வழங்க வேண்டிய நிலையில், இன்னும் நிதி தரப்படவில்லை.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒன்றியஅரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. நிதியை விடுவிக்க வேண்டி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், ஒன்றிய அதிகாரிகளையும் சந்தித்து நிதியை விடுவிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு அதிகாரிகள் மறுத்துவருகிறனர்.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்க உள்ள மும்மொழி கொள்கையை நடைமுறை படுத்துவது, 3,5,8,10,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பிஎம் Shri ஸ்கூலை தமிழ்நாட்டில் தொடங்கிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி வழங்க முடியும் என ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.

நடைமுறையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் வட்டார கல்வி வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் 60 விழுக்காடு ஊதியத்தை ஒன்றிய அரசும், 40 விழுக்காடு ஊதியத்தை மாநில அரசு வழங்கி வருகிறது. தற்போது முழு ஊதியத்தையும் மாநில அரசே ஏற்று வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் சிறப்பு ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, வட்டார கல்வி வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகிவிடும். இதனால் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கும் நிலை உருவாகும். அதே போல மாணவர்களின் அறிவுசார் கலைத்திறன்களை போட்டிகள் மூலமாக வெளிக்கொண்டு வரும், கலை திருவிழாக்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை வழங்குவதும் பாதிக்கும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் தொகை விடுவிக்க வேண்டி ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வைக்கும் போது, ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வந்து சேரவில்லை. இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குகளை நிறைவேற்றிட மேலும் காலதாமதம் ஆகிறது.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News