போர் முடிவுக்கு வருமா? வராதா? செலன்ஸ்கி திட்டவட்டம்..!

போர் முடிவுக்கு வருமா? வராதா?  செலன்ஸ்கி  திட்டவட்டம்..!

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் தருணம்.

ரஷ்யா மீதான அணுகுமுறையை இந்தியா மாற்றினால் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்தும், இதுவரை சுமுக தீர்வை எட்ட முடியவில்லை.

இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி அரசுமுறை பயணமாக போலந்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் அவரை உக்ரைனின் உயர்நிலை தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து மரின்ஸ்கி அரண்மனையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும், பிரதமர் மோடியும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அந்த சந்திப்பு மிக நன்றாக அமைந்தது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக எனது கருத்துகளை முன்வைத்தேன்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை பல உலக நாடுகளும் நிறுத்திவிட்டன. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனை இந்தியா நிறுத்தினால் புதின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். புதினுடைய பொருளாதாரம் ஆயுதம் சார்ந்தது. அவருடைய கரங்களை இந்தியா, சீனா எண்ணெய் இறக்குமதி மூலம் வலுவாக்கின்றன. அந்த வகையில் ரஷ்ய ஆயுதப்படையை பலப்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்.

இந்தியா நினைப்பதுபோல் புதின் இந்தியாவை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தகர்த்திருக்காது.

இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுகுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story