கழிவறையில் சமோசா தயாரித்த உணவகத்துக்கு பூட்டு : சவூதியில் அதிர்ச்சி..!
டாய்லெட்டில் உணவுப்பொருட்களை தயாரித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்த உணவகத்தை சவூதி அதிகாரிகள் மூடி சீல்வைத்தனர்.
HIGHLIGHTS
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அந்த உணவகம் மூடப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறைகளில் சமோசா மற்றும் பிற தின்பண்டங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சவூதி அதிகாரிகள் அந்த உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.
ஜெட்டா நகராட்சி அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த உணவகத்தினர் சமோசா உட்பட பல தின்பண்டங்களை கழிவறையில் தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் சோதனை செய்தபோது, அங்கு காலாவதியான உணவுப்பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த இடத்தில் சிறு பூச்சிகள் , உணவுப்பொருட்களை கொறித்து உண்ணும் வண்டுகள் காணப்பட்டன.
அந்த உணவகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. 'அட..அங்கயாடா..இத்தனை நாள் செஞ்சதை வாங்கிச் சாப்பிட்டோம்' என்று வடிவேல் பாணியில் நொந்து நூடுல்ஸ் ஆனார்களாம் வாடிக்கையாளர்கள்.