நீட் தேர்வில் 3 முறை தோல்வியால் மன உளைச்சல் – மாணவரின் இறுதி முடிவு

நீட் தேர்வில் 3 முறை தோல்வியால் மன உளைச்சல் – மாணவரின் இறுதி முடிவு
சேலம் மாவட்டத்தில், நீட் தேர்வு தோல்வி பயத்தில் மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய 20 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சன் – யோகலட்சுமி தம்பதியின் மகனான கவுதம், 2023-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்ததையடுத்து நீட் தேர்வை எழுதினார். முதல் முயற்சியில் தேர்ச்சி பெறாத அவர், மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. இந்தத் தோல்விகள் அவரது மனநலத்தை பெரிதும் பாதித்தன. இதனால், அவர் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்விலும் பங்கேற்ற கவுதம், மீண்டும் தோல்வி அடைந்திருக்கலாம் என்ற பயத்தில், மனஅழுத்தத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த காலத்தில் கவுதம் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததையும், பெற்றோர் தாமாகவே காப்பாற்றியதையும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகள் மாணவர்களின் மனநிலையை எவ்வளவாக பாதிக்கின்றன என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. மாணவர்களின் மனநலத்தின் மீது கவனம் செலுத்துவது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என்பதை இந்த துயரச் சம்பவம் வலியுறுத்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu