/* */

கோலம் போட்டு அசத்தவும் வந்தாச்சு செயலி! 'கோல சுரபி'யில் இருக்கு புள்ளிக் கோலங்கள்

எல்லாவற்றையும் மொபைல் ஆப் மூலம் செய்து முடிக்கும், தற்போதைய கம்ப்யூட்டர் காலத்தில், விதவிதமான கோலங்கள் போட்டு அசத்தவும் கோல சுரபி என்ற இணைய செயலி வரப்பிரசாதமாக வந்துள்ளது.

HIGHLIGHTS

கோலம் போட்டு அசத்தவும் வந்தாச்சு செயலி!  கோல சுரபியில் இருக்கு புள்ளிக் கோலங்கள்
X

 நன்றி: கோலசுரபி

இது மார்கழி மாதம். பனியில்லாத மார்கழியைக் கூட பார்த்துவிடலாம், கோலம் இல்லாத மார்கழி அதிகாலை பொழுதுகளை பார்க்க முடியாது. வண்ண வண்ண கோலங்களும், அதற்கு மத்தியில் பூசணிப்பூவும் வீட்டு வாயில்களை அலங்கரித்து வருகின்றன. வண்ணங்கள் பல இருந்தாலும், சில நேரங்களில் என்ன கோலம் போடுவது என்று யோசித்தே, நாம் நேரத்தை வீணாக்குவதுண்டு.

இதற்காக, வீட்டு பரணில் உள்ள பழைய கோல நோட்டு புத்தங்களை தேடியெடுத்து பார்த்து, கோலங்களை தேடுவது அந்த காலம். இதுவோ, கம்ப்யூட்டர் யுகம். சாப்பிடும் உணவில் இருந்து, மருந்து வரை, எல்லாவற்றையுமே செயலிகள்தான் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், நமது எண்ணங்களை வண்ணங்களாக்கி, கோலமாக்கி காட்டுவதற்கும் செயலி வந்துவிட்டது. கோலசுரபி என்ற இணையச்செயலி , இந்த மார்கழி மாதத்தின் புதிய வரவாக அறிமுகமாகி உள்ளது.
கோலம் என்பது, வெறும் சுண்ணாம்புப் பொடியில் வரையப்படும் கோடுகள் அல்ல; கோலத்திலும் பல வகை உண்டு; அவற்றுக்கு பல பொருட்கள் உண்டு. கோலத்தின் பின்னணியில், கணித நுட்பமான வடிவியலும், சேர்வியலும் உள்ளன. அதை சரியாகக் கணித்து, கணிதப் பண்புகளாக கணினிக்குக் கொடுத்தால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கோலங்களை உருவாக்கலாம்.
கோலம் என்பது கணிதமும், கலையுணர்வும் கலந்த கலவை. சங்கப் பாடலான நற்றிணையில் "வரி" என்றும் அகநானூற்றில் "கோல்" என்றும் பரிபாடலில் "அழகு/ஒப்பனை" என்றும் பல்வேறு குறிப்புகள் கோலத்தைப் பற்றி உள்ளன. வரிவடிவக் கோலங்கள் தவிர பெரும்பாலும் நான்கு அல்லது இரு புறமும் ஒரே ஒழுங்கில் சதுரம், வட்டம், அறுகோணம் அல்லது எண்கோணம் வடிவில் இருக்கும். சிக்கு, நெளி, கம்பி, புள்ளி போன்றவை அதன் அங்கங்களாகும். ஒருமுறை வந்த வழியே கோடுகள் மீண்டும் வரக்கூடாது.
இந்த முயற்சியின் பலனாக உருவானதே, கோலசுரபி என்ற இணையச்செயலி ஆகும். இந்தப் புதுமையான செயலியை அதற்கான http://apps.neechalkaran.com/kolasurabhi முகவரியில் பயன்படுத்தலாம் ஆண்ட்ராய்டு செல்போன் அல்லது கணினி வழியாக எளிதாக அணுகி, கோலங்களை வரைந்து சேமித்துக் கொள்ள முடியும். நேர்ப்புள்ளி, ஊடு புள்ளி கோலங்கள், நட்சத்திரக் கோலங்கள், கம்பிக் கோலங்கள் போன்ற சிக்கலான கோலங்கள் அனைத்தையும் நொடியில் வரைந்து கொடுக்கிறது.
மென்பொறியாளர் நீச்சல்காரன்.
யாருடைய உதவியுமின்றி விரும்பிய புள்ளிகளில், விரும்பிய நிறத்தில் புதுப்புதுக் கோலங்களை இதில் உருவாக்க முடியும். சில கோலங்கள், யாருமே வரையாத கடினமான முடிச்சுகளுடனும், அழகான வளைவுகளுடனும் வரும். கோலப்போட்டிகளுக்குத் தயாராகும் முன்னர் இதில் உலாவினால் நிச்சயம் வெற்றிக்கான கோலம் கிடைக்கும். வாசல்களில் அலங்கரிக்க மட்டுமல்ல, நமது அழைப்பிதழ்கள், பதாகைகள் போன்றவற்றில் அழகூட்ட இந்த வடிவங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
பொதுவாக ரங்கோலி எனப்படும் கோலங்கள், ஆந்திராவில் முக்கு, மேற்கு வங்காளத்தில் ஆல்பனா என்றும், சத்தீஸ்கரில் சௌக்புராணா என்றும் இதர பகுதிகளில் ரங்கோலி, ரங்கவல்லி என்று அழைக்கப்படுகிறது. கோலங்களை, வாசலில் இடுவது ஒரு கலையே. கோலங்களைச் சிறுவயதில் நன்கு வரையும் குழந்தைகள் கணிதத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
எனவே, குழந்தைகளுக்கு கற்பனைத் திறனை வளர்க்க, அக்கலையை அடுத்த தலைமுறையினரிடமும் கடத்த வேண்டும். கோலங்களை வரைந்து குழந்தைகள் பழக எளிய செயல்முறைப் பயிற்சிக்கான ஒரு
http://apps.neechalkaran.com/assets/practice_book.pdf
மின்னூலும் இதனுடன் உள்ளது. இதில் உள்ள கோலங்களை அச்சிட்டு, அதில் உள்ள கோலங்களுக்கு வண்ணம் தீட்டலாம், நிறைவடையாத கோலங்களை வரைந்து காட்டலாம்.
அதெல்லாம் சரி, இந்த கோலச் சுரபி செயலியை உருவாக்கியது யார் என்றுதானே கேட்கிறீர்கள். எழுத்தாளரும், மென்பொறியாளருமான நீச்சல்காரன் தான், இதனை வடிவமைத்துள்ளார். இவர், தமிழ்க் கணினி தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Updated On: 22 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்