கணவனை கொல்ல திட்டமிட்ட மனைவி: கன்னியாகுமரியில் தொடரும் சம்பவங்கள்

கணவனை கொல்ல திட்டமிட்ட மனைவி: கன்னியாகுமரியில் தொடரும் சம்பவங்கள்
கணவனை கொல்ல மனைவி திட்டமிட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி கேரள மாநில எல்லையில் உள்ள ஒரு தமிழக மாவட்டமாகும். இதன் காரணமாக கேரள கலாச்சாரம் அம்மாவட்ட மக்களிடம் அதிக அளவில் இருப்பது உண்டு. குறிப்பாக கள்ளக்காதல் சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொண்டு கொலை செய்ததால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

கொலை முயற்சி

அதனை தொடர்ந்து இன்னொரு காதல் விவகாரத்தில் காதலன் காதலியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் இன்னொரு சம்பவமும் நடந்தது. தனது புதிய காதலனுடன் சேர்ந்து கொண்டு பழைய காதலனை கூலிப்படையை ஏவி கொலை முயற்சித்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல்

இப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத்தள்ள முயற்சித்த மனைவி பற்றிய புதிய தகவல் கிடைத்து உள்ளது. இந்த சம்பவம் எங்கே நடந்தது என பார்ப்போமா?

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆழ்வார் கோயில் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டிட தொழிலாளி. இவருக்கும் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதியர் திருமணத்திற்கு பின்பு இரண்டு மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் ஒருநாள் இரவில் திடீரென வீட்டில் நினைவிழந்து விழுந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் சில நாட்கள் கடந்த பின்பும் தனது உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகவில்லை.

நடத்தையில் சந்தேகம்

இதற்கிடையே, கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடத்தையில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை கண்காணிக்க துவங்கியுள்ளார் வடிவேல் முருகன். ஏற்கனவே, திருமணமாகி சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கூறியுள்ளார்.

குட்டு அம்பலமானது

இதனால் உஷார் ஆன வடிவேல் முருகன் தனது மனைவி சுஜாவின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து சுஜா தொடர்பில் இருந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனைவியின் வாட்ஸ் ஆப் ஷாட்டில் முன்னாள் காதலனுடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்ட பதிவுகள் இருந்துள்ளதையும் பார்த்து மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

போலீசார் விசாரணை

அந்த பதிவில் உன் கணவருக்கு தரும் மருந்தை மாற்றி ஸ்லோ பாய்சன் கொடு. அவன் இறந்து விட்டால் கணவன் இறப்புக்கு மருந்துதான் காரணம் என சொல்லிவிடலாம் என்று சுஜாவிடம் முன்னாள் காதலன் பேசி உள்ளார். இந்த ஆடியோவை பதிவு செய்த வடிவேல் முருகன் இதுபற்றி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலனின் வாட்ஸ் ஆப் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் சமர்பித்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story