பாலை ஏன் பாட்டிலில் விற்கக் கூடாது ? உயர் நீதிமன்றம் யோசனை

சென்னை உயர்நீதி மன்றம் (பைல் படம்)
பால் பொருட்களுக்குதான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது, அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்ட்டிக் பொருள்கள் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்ள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவு பொருட்கள், தீன்பண்டம், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாக கூறி நீதிபதிகளிடம் காண்பித்தார். மேலும், மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும் 15 பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருவதை தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி சில்லறை வியாபார கடைகளை மூடும் நிலையில், அரசே பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா என நீதிபகள் கேள்வி எழுப்பினர்.
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிகில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை, அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது, அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பால் ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu