திருச்சுழியில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டிய மன்னர் காலத்து கற்சிலைகள் கண்டெடுப்பு

திருச்சுழியில் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை, பூமாதேவி சிலை, ஸ்ரீதேவி சிலை என மூன்று சிலைகள்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கிழவன் என்பவர் 50 ஆண்டுகளுக்குப் பின்பு விவசாயப் பணிக்காக தனது நிலத்தை உழுதபோது அந்த நிலத்தில் பெருமாள் சிலை,பூமாதேவி சிலை,ஸ்ரீதேவி சிலை என மூன்று கற்சிலைகள் சுமார் 2 அடி உயரத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்கள் சிலையைக் காண குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலைகளை எடுத்து செல்ல முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சமரசம் ஏற்படாத நிலையில் அந்தப் பகுதியில் பெருமாள் கோவில் கட்டி வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து தொடர்ந்து சிலையைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மூன்று சுவாமி சிலைகளையும் மீட்ட வருவாய்த்துறையினர் அவற்றை திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu