வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 60 வார்டு கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
HIGHLIGHTS
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்கும் நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கவுன்சிலர் பதவி ஏற்பு விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. புதிய வண்ணத்துடன் அலங்காரங்களுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது.
வேலூர் மாநகராட்சியில் தற்போது 30 பெண் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒரு புறமும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.
1வது வார்டு முதல் வரிசையாக. கவுன்சிலர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டு 2 இடங்களில் பெரிய திரைகளில் பதவி ஏற்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் வெளியே இருந்தவர்கள் பதவியேற்பு விழாவை கண்டு களித்தனர்