வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றாற்போல் போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேருந்துகளை இயக்குவதற்காக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை சுத்தம் செய்து இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பேருந்து நிலையப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, பயணிகள் அமரும் இடம் போன்றவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
ஆனால், நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.